Privacy Settings

To provide you with the best possible experience, we use cookies and similar technologies. Some cookies are necessary to make our website work and cannot be refused. You can accept or decline the use of additional cookies, which we use only to improve your experience. None of this data will ever be sold or used for marketing. To learn more, read the Global Policy on Use of Cookies and Similar Technologies. You can customize your settings at any time by going to Privacy Settings.

Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று இயேசு சொல்கிறார். அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற யூதர்கள் கடவுளின் குரலைக் கேட்கிறார்கள்

அதிகாரம் 104

கடவுள்மீது யூதர்கள் விசுவாசம் காட்டுவார்களா?

கடவுள்மீது யூதர்கள் விசுவாசம் காட்டுவார்களா?

யோவான் 12:28-50

  • நிறைய பேர் கடவுளின் குரலைக் கேட்கிறார்கள்

  • நியாயத்தீர்ப்புக்கு அடிப்படை எது?

நிசான் 10, திங்கள்கிழமை அன்று, தன்னுடைய மரணத்தைப் பற்றி ஆலயத்தில் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மரணத்தால் கடவுளுடைய பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று அவர் கவலைப்படுகிறார். அதனால், “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொல்கிறார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்” என்று வானத்திலிருந்து ஒரு கம்பீரமான குரல் கேட்கிறது.—யோவான் 12:27, 28.

அதைக் கேட்டு மக்கள் குழம்பிப்போகிறார்கள். இடி இடித்ததென்று சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொல்கிறார்கள். (யோவான் 12:29) ஆனால், இப்போது பேசியது யெகோவா! இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்திலிருந்து, யெகோவா பேசியதை ஏற்கெனவே சிலர் கேட்டிருக்கிறார்கள்.

மூன்றரை வருஷங்களுக்கு முன்பு இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கடவுள் சொன்னதை யோவான் ஸ்நானகர் கேட்டார். கி.பி. 32-ஆம் வருஷத்தின் பஸ்காவுக்குப் பிறகு, யாக்கோபு, யோவான், பேதுரு ஆகியோருக்கு முன்னால் இயேசு தோற்றம் மாறினார். அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று கடவுள் சொன்னதை அவர்கள் மூன்று பேரும் கேட்டார்கள். (மத்தேயு 3:17; 17:5) இப்போது மூன்றாவது தடவையாக, பல பேர் கேட்கும் விதத்தில் யெகோவா பேசுகிறார்.

“இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காக வந்தது” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 12:30) அவர் உண்மையிலேயே கடவுளுடைய மகன், வரவேண்டிய மேசியா என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது.

கடவுளுக்கு உண்மையுள்ளவராக இயேசு வாழ்கிறார். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கை காட்டுகிறது. அதோடு, இந்த உலகத்தை ஆளுகிற பிசாசாகிய சாத்தான் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் நிரூபிக்கிறது. அதனால், “இப்போதே இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்று இயேசு சொல்கிறார். இயேசுவின் மரணத்தை தோல்வி என்று சொல்ல முடியாது, அது வெற்றிதான். எப்படி? “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது எல்லா விதமான மக்களையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” என்று இயேசு விளக்குகிறார். (யோவான் 12:31, 32) ஒரு மரக் கம்பத்தில் இயேசு கொல்லப்படுவார். தன்னுடைய மரணத்தின் மூலம், மற்றவர்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்வார். அதோடு, முடிவில்லாத வாழ்வுக்கு வழியைத் திறந்துவைப்பார்.

‘உயர்த்தப்படுவதை’ பற்றி இயேசு சொன்னதைக் கேட்ட மக்கள், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்கிறார்கள். (யோவான் 12:34) எத்தனையோ அத்தாட்சிகள் இருந்தும், கடவுளுடைய குரலை நேரடியாகக் கேட்ட பிறகும், பெரும்பாலான மக்கள் இயேசுவை உண்மையான மனிதகுமாரனாகவும், வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவாகவும் ஏற்றுக்கொள்வதில்லை.

முன்பு சொன்னபடியே, இப்போதும் இயேசு தன்னை “ஒளி” என்று குறிப்பிடுகிறார். (யோவான் 8:12; 9:5) “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். . . . நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு ஒளி உங்களோடு இருக்கும்போதே அதில் விசுவாசம் வையுங்கள்” என்று சொல்கிறார். (யோவான் 12:35, 36) இவற்றைச் சொன்ன பின்பு, இயேசு அங்கிருந்து போய்விடுகிறார். ஏனென்றால், நிசான் 10-ஆம் தேதியில் அவர் சாகக் கூடாது. பஸ்கா கொண்டாடப்படுகிற நிசான் 14-ஆம் தேதியில்தான் அவர் ‘உயர்த்தப்பட’ வேண்டும், அதாவது மரக் கம்பத்தில் அறையப்பட வேண்டும்.—கலாத்தியர் 3:13.

இயேசு ஊழியம் செய்தபோது, யூதர்கள் அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை. இது பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் தங்கள் கண்களால் பார்க்காமல் இருப்பார்கள் என்றும், இதயம் இறுகிப்போயிருப்பதால் கடவுளிடம் திரும்பி வந்து குணமடையாமல் இருப்பார்கள் என்றும் ஏசாயா சொல்லியிருந்தார். (ஏசாயா 6:10; யோவான் 12:40) எத்தனையோ அத்தாட்சிகள் இருந்தும்கூட, இயேசுதான் கடவுளால் வாக்குக் கொடுக்கப்பட்ட மீட்பர் என்பதையும், வாழ்வுக்கான வழி என்பதையும் ஏற்றுக்கொள்ள பெரும்பாலான யூதர்கள் வேண்டுமென்றே மறுக்கிறார்கள்.

நிக்கொதேமு, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு ஆகியோரும், யூதத் தலைவர்களில் நிறைய பேரும் இயேசுமேல் “விசுவாசம் வைத்தார்கள்.” ஆனால், தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் செயலில் காட்டுவார்களா? அல்லது, ஜெபக்கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவோமா என்ற பயத்தாலோ, ‘மனிதர்களிடமிருந்து வரும் மகிமையை விரும்புவதாலோ’ தங்கள் விசுவாசத்தை மூடிமறைப்பார்களா?—யோவான் 12:42, 43.

தன்மீது விசுவாசம் வைப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை இயேசு விளக்குகிறார். “என்மேல் விசுவாசம் வைக்கிறவன், என்மேல் மட்டுமல்ல, என்னை அனுப்பியவர்மேலும் விசுவாசம் வைக்கிறான். என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பியவரையும் பார்க்கிறான்” என்று சொல்கிறார். மக்களுக்குக் கற்பிக்கும்படி இயேசுவிடம் கடவுள் ஒப்படைத்த சத்தியங்களும், இயேசு தொடர்ந்து அறிவிக்கிற சத்தியங்களும் மிக முக்கியமானவை. அதனால்தான், “என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 12:44, 45, 48.

கடைசியாக, “நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்” என இயேசு சொல்கிறார். (யோவான் 12:49, 50) தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்காக, சீக்கிரத்தில் தன்னுடைய உயிரையே பலியாகக் கொடுக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது.—ரோமர் 5:8, 9.